ஹைதராபாத்தைச் சேர்ந்த இளம் பெண் இணையதள உள்ளடக்கப் படைப்பாளி தனக்கு நேர்ந்த அதிர்ச்சிகரமான அனுபவம் குறித்து வீடியோ ஒன்றைச் வெளியிட்டுள்ளார். சனிக்கிழமை இரவு 9:00 மணியளவில் சார்மினார் அருகே தனது காருக்காகக் காத்திருந்தபோது, ஸ்கூட்டரில் வந்த ஒரு நபர் அவரிடம் வந்து “எங்கே போகிறீர்கள்? நான் உங்களை இறக்கிவிடவா?” என்று கேட்டுள்ளார்.

அந்த நபர் “உங்களுக்கு ரேபிடோ  சவாரி வேண்டுமா மேடம்?” என்று கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பெண், “நீங்கள் ரேபிடோ ஓட்டுநரா? அப்படியென்றால் உங்களுடைய அடையாள அட்டையைக் (Driver ID) காட்டுங்கள்” என்று கேட்டுள்ளார். மேலும், அந்த நபரின் ஸ்கூட்டரில் வண்டி எண் இல்லாததைக் கவனித்த அப்பெண், “உங்கள் வண்டியில் ஏன் எண் இல்லை?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆனால் அந்த நபர் ஓட்டுநர் அடையாள அட்டையைக் காட்டுவதற்குப் பதிலாக, அப்போதுதான் தனது கைபேசியில் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து ரேபிடோ செயலியைப் பதிவிறக்கம் செய்யத் தொடங்கியுள்ளார். விசாரணையில் தனது பெயர் இர்ஃபான் என்று கூறிய அவர், பின்னர் “வண்டி ஸ்டார்ட் ஆகவில்லை” என்று மழுப்பலாகப் பேசியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்பெண், “வண்டியே ஓடாதபோது எப்படி என்னை அழைத்துச் செல்வதாகக் கூறினாய்?” எனக் கேட்டு, அவரிடமிருந்த கைபேசியைப் பறித்துப் பார்த்தபோது அது உள்நுழைவதற்கான OTP பக்கத்தில் மட்டுமே இருந்தது தெரியவந்தது.

அப்பெண் அவரிடம் உரத்த குரலில் முழுப் பெயரைக் கேட்டபோது, அந்த நபர் “நடுரோட்டில் நீங்கள் என்ன செய்யப் பார்க்கிறீர்கள்?” என்று கேட்டுள்ளார். அதற்கு அப்பெண், “இங்கிருந்து மரியாதையாகக் கிளம்பு” என்று கண்டிப்புடன் கூறியுள்ளார். இரவில் பாதுகாப்பு பரிசோதனைகள் மற்றும் அழைப்பு வசதிகள் இருப்பதால் மற்ற செயலிகளை விட ரேபிடோவையே தான் பாதுகாப்பானதாகக் கருதிப் பயன்படுத்தி வந்ததாக அப்பெண் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

“>

மேலும், இந்தச் சம்பவத்திற்காகத் தான் ரேபிடோ நிறுவனத்தைக் குற்றம் சுமத்தவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளார். “நான் ரேபிடோ சேவையை முழுமையாக நம்புகிறேன், அதைத்தான் எப்போதும் பாதுகாப்பானதாகக் கருதுகிறேன்; உங்கள் நிறுவனத்தால் இது நடக்கவில்லை” என்று ரேபிடோ நிறுவனத்தைக் குறிப்பிட்டு அப்பெண் தனது பதிவில் பதிவிட்டுள்ளார்.