திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி அருகே மோவூர் என்ற கிராமத்தில் வசித்த 17 வயது சிறுமி அங்குள்ள மாந்தோப்பில் மாடு மேய்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். கடந்த 6 மாதங்களுக்கு முன், சிறுமி மாந்தோப்புக்கு மாடு மேய்க்க சென்றுள்ளார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த 5 வாலிபர்கள் அவளை கூட்டு பலாத்காரம் செய்து, பின் செல்போனில் வீடியோ எடுத்து, வைத்து மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் அந்த சிறுமி மனவேதனை அடைந்து சம்பவம் நடந்த மறுநாளே, வீட்டில் திடீரென தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றதில், உடல் கருகிய நிலையில் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் 4 பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில் ஓரளவு உடல்நிலை சீரான பின் மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு வந்த பிறகு, கடந்த சில நாட்களாக அச்சிறுமியின் உடல்நிலை திடீரென மோசமான நிலையை அடைந்தது.

இதனால் அவரை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தியுள்ளது.