கர்நாடக மாநிலம் தாவண்கரே மாவட்டத்தில் நிகழ்ந்த ஒரு கோர விபத்து அப்பகுதி மக்களைப் பதைபதைக்க வைத்துள்ளது. பம்பு பஜார் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த 50 வயது நபர் ஒருவர், லாரி மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சோகச் சம்பவம் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளதுடன், காவல்துறையினர் அந்தப் பதிவைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உயிரிழந்தவர் மஞ்சுநாத் என்பது காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சம்பவத்தன்று அவர் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, தனக்கு முன்பாகச் சென்றுகொண்டிருந்த டிராக்டர் ஒன்றை முந்திச் செல்ல முயன்றுள்ளார். அப்போது பின்னால் வந்த அதிவேக லாரி அவரது பைக் மீது மோதியதில், கட்டுப்பாட்டை இழந்த மஞ்சுநாத் நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டார்.

 

ரோட்டில் கீழே விழுந்த மஞ்சுநாத் மீது லாரி ஏறி இறங்கியதில், அவர் சம்பவ இடத்திலேயே படுகாயமடைந்து உயிர் இழந்தார். இந்தச் சம்வத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகவலறிந்து உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், மஞ்சுநாத்தின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், சாலை விதிகள் மீறப்பட்டுள்ளதா என்பது குறித்துத் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.