திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பேரம்பாக்கம், நரசிம்மபுரம், சின்னத் தெருவில் வசிப்பவர் பிரபு (36). இவருடைய மனைவி திவ்யா (31). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால், சென்னை எழும்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் செயற்கை முறையில் குழந்தை பெறுவதற்காக சிகிச்சை பெற்று வந்தார். இதற்காக ரூ.5 லட்சம் வரை பணம் செலுத்தி சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவரது கர்ப்பப்பையில் நீர்கட்டிகள் இருப்பதாக கூறி திரு.வி.க. நகரில் உள்ள அந்த மருத்துவமனையின் கிளை மருத்துவமனையில் திவ்யாவுக்கு அறுவை சிகிச்சை  செய்தனர். பின்னர் அவர் சுயநினைவு இழந்ததால், அங்கிருந்து மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் திவ்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதை கேட்டு  திவ்யாவின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்து, திரு.வி.க. நகரில் உள்ள மருத்துவமனையை முற்றுகையிட்டு, தவறான சிகிச்சையால் தான் அந்த பெண் இறந்ததாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  மேலும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் விளக்கம் கூறும்வரை அவரது உடலை வாங்க மாட்டோம் என கூறினர். பின்னர் அங்கு வந்த போலீசார் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தினர் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர். ஆனால் அவர்கள்,  மருத்துவமனை நிர்வாகத்தின் மீது போலீசில் புகார் கொடுக்க உள்ளதாக கூறி, கலைந்து சென்றனர்.