தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குருவிகுளம் தெற்கு தெருவில் வசிப்பவர் வீரபுத்திரன் மகன் ரகுவரன் (26). இவர் ஒரு கூலி தொழிலாளி. இவர் நேற்று குருவிகுளம்-அத்திப்பட்டி சாலையிலுள்ள 100 அடி உயர பி.எஸ்.என்.எல். செல்போன் கோபுரத்தின் மீது ஏறி, தற்கொலை மிரட்டல் விடுத்ததால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டார்கள். பின் தீயணைப்பு வீரர்கள் டவரில் ஏறி அவரிடம் பேச்சுவார்த்தை நடத்திய போது அவர், எனது மனைவி குடும்ப தகராறு காரணமாக குழந்தையுடன் வீட்டை விட்டு சென்றுவிட்டார்.

எனவே அவரை என்னோடு சேர்த்து வைக்க உறுதிமொழி கொடுத்தால் தான் கீழே இறங்கி வருவேன் என பிடிவாதமாக கூறிய அவரிடம், போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் சுமார் 2 மணிநேரம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனையடுத்து அவரது மனைவியுடன் சேர்த்து வைப்பதாக அவர்கள் உறுதிமொழி அளித்த பிறகு, அவர் கீழே இறங்கி வந்தார். பின்னர் அவருக்கு போலீசார் அறிவுரை வழங்கி உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.