தில்லியில் இருந்து குஜராத் மாநிலம் சபர்மதி நோக்கிச் சென்ற ஆசிரமம் விரைவு ரயிலில் தரமற்ற குடிநீர் பாட்டில்களை விற்பனை செய்த ஊழியரை பயணிகள் முற்றுகையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குடிநீருக்குப் பதிலாக, முத்திரை இல்லாத மற்றும் முறையான மூடி இல்லாத பாட்டில்களை அந்த ஊழியர் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாகப் பயணிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

இது குறித்து பயணிகள் கேள்வி எழுப்பியபோது, அந்த ஊழியர் உரிய பதில் அளிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டதுடன் தனது அடையாள அட்டையைக் காட்டவும் மறுத்துள்ளார். இந்த வாக்குவாதம் குறித்த காணொலி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

ரயில்களில் தரமற்ற குடிநீர் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.