பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த 14-ஆம் தேதி முதல் 17- ஆம் தேதி வரை 4 நாட்கள் கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட திருவண்ணாமலையை சேர்ந்த சென்னை, சேலம், புதுச்சேரி உள்ளிட்ட வெளியூரில் தங்கி வேலை பார்ப்பவர்கள், தொழில் செய்பவர்கள் மற்றும் விடுதியில் தங்கி படிப்பவர்கள் என பலர் திருவண்ணாமலைக்கு வந்துள்ளனர்.

மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விளையாட்டு போட்டிகள், காளை விடும் விழா போன்றவை நடைபெற்றது. இதையடுத்து பொங்கல்  விடுமுறைகள் முடிவடைந்த நிலையில், வேலைக்கு செல்பவர்கள் மற்றும் விடுதியில் தங்கி படிப்பவர்கள் மீண்டும் தங்கள் பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால்   பேருந்து நிலையத்தில் மக்கள் குவிந்ததால், கூட்டம் அலைமோதியது.

மேலும் சென்னை,வேலூர், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும்  பேருந்துகளில் பொதுமக்கள் ஓடி சென்று ஒருவரை ஒருவர் முண்டியடித்து கொண்டு ஏறி, இடம் பிடித்தனர். இதனால் திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் பரபரப்பாக காணப்பட்டது.