தமிழ்நாடு சட்டசபையில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் மாதம் 20-ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். இந்த பட்ஜெட்டில் கடந்த முறை இடம்பெறாத சில முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000, சிலிண்டர் மானியம் ரூ. 100, மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை, முதியோர் ஓய்வூதியத் தொகை ரூ. 1500, கல்வித்துறை மீண்டும் மாநில பட்டியலுக்குள் கொண்டு வருதல் போன்ற அறிவிப்புகள் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இதில் குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 என்பது தற்போது உறுதியாகி விட்டது. பட்ஜெட் கூட்டத்தொடரின் போது குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 உதவி தொகை தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என முதல்வர் ஸ்டாலின் மகளிர் தினத்தில் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மாநில திட்ட குழுவின் துணைத் தலைவர் ஜெ. ஜெயரஞ்சன் வருமான வரி செலுத்தும் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது என தற்போது தெரிவித்துள்ளார். மேலும் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் போது குடும்ப தலைவிகளுக்கு மகளிர் உரிமைத்தொகை திட்டம் குறித்து முழுமையாக அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.