தமிழகத்திலுள்ள பாலிடெக்னிக் கல்லூரிகளில் பொறியியல் டிப்ளமோ மாணவர்களுக்கு ஏப்ரல் மற்றும் அக்டோபர் போன்ற மாதங்களில் Semester தேர்வுகளானது நடத்தப்படுகிறது. இத்தேர்வுக்குரிய கட்டணத் தொகையை அரியர் வைத்திருக்கும் மாணவர்கள் மற்றும் ரெகுலர் மாணவர்கள் என அனைவரும் நேரடி முறையில் கல்லூரி அலுவலகத்தில் செலுத்தி வந்தனர். இந்த முறையை தொழில்நுட்ப கல்வித் துறை இப்போது மாற்றியுள்ளது.

அந்த வகையில் இனிமேல் பாலிடெக்னிக் மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே தங்களின் தேர்வுக் கட்டணத்தினை செலுத்திக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகிற ஏப்ரல் மாதத்திலிருந்து தேர்வு கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தும் முறை நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது. அதோடு ஆன்லைன் மூலம் கட்டணத்தை செலுத்துவதற்குரிய வழிமுறைகள் தொடர்பான விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தொழில்நுட்ப கல்வி இயக்க கூடுதல் இயக்குனர் தெரிவித்து உள்ளார்.