கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் தேசிய திறனாய்வு போட்டி தேர்வு  நடத்தப்படுகிறது. இது 8-ஆம் வகுப்பு  மாணவர்களுக்கு ஆண்டுதோறும் நடைபெறுகிறது. இந்த தேர்வு தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்காக நடத்தப்படுகிறது.

அதன்படி நடப்பு கல்வியாண்டில் இத்தேர்வு பொள்ளாச்சி-பாலக்காடு ரோடு நகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளி, கோட்டூர் ரோடு நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளி, கோட்டூர் அரசு மேல்நிலை பள்ளி, ஆனைமலை அரசு மேல்நிலை பள்ளி, கிணத்துக்கடவு மேல்நிலை பள்ளி, மாரியம்மன் பெண்கள் மேல்நிலை பள்ளி போன்ற 9 பள்ளிகளில் நடைபெற்றுள்ளது.

இந்த போட்டி தேர்வை எழுதுவதற்காக மொத்தம் 2,451 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பித்த நிலையில், 2,327 பேர் மட்டும் எழுதியுள்ளனர். மேலும் இந்த தேர்வினை பொள்ளாச்சி கல்வி மாவட்ட அதிகாரிகள் மற்றும் கல்வி அலுவலர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.