தமிழ்நாட்டில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு ‘நிலா திருவிழா 200’ என்ற நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவினை தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை, மத்திய அரசின் விஞ்ஞான் பிரசார், அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டி, பெங்களூருவில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஆஸ்ட்ரோபிசிக்ஸ், அஸ்ட்ரோனாமிக்கல் சொசைட்டி ஆப் இந்தியா, பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம், அறிவியல் பலகை ஆகியவை இணைந்து நடத்துகிறது. இந்த திருவிழா கடந்த 25-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி (நாளை) வரை நடைபெறுகிறது.

பள்ளி குழந்தைகள் முதல் கல்லூரி மாணவர்கள், பெரியவர்கள் வரை கலந்து கொள்ளும் இந்நிகழ்ச்சியானது சென்னையில் உள்ள மெரினா பாரதியார் சிலை அருகில் நேற்று நிலாச்சோறு என்ற தலைப்பில் நடத்தப்பட்டது. மேலும் இங்கு பொது மக்களுக்கு அதிநவீன தொலைநோக்கிகள் மூலம் நிலாவினுடைய முழு உருவத்தையும் காண்பிக்கப்பட்டதை, 500-க்கும் மேற்பட்டோர் வரிசை நின்று தொலைநோக்கியின் மூலம் நிலாவின் அழகை கண்டு ரசித்தவர்கள் ரசித்தார்கள். இதனையடுத்து மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து சமைத்துக் கொண்டு வந்த உணவை மற்றொருவருடன் பகிர்ந்து, இந்த திருவிழாவை கொண்டாடி வந்தார்கள். இந்நிலையில் சென்னை, கோவை, திருச்சி உள்பட தமிழ்நாடு முழுவதும் மொத்தம் 200 இடங்களில் பகுதி பகுதியாக இந்த நிலாத்திருவிழா, வானவியலில் ஆர்வமுள்ள தன்னார்வலர்களால் நடத்தப்பட்டு வருகிறது.