சர்கார் திரைப்படத்தில் வெளிநாட்டில் வசிக்கும் விஜய் தன் வாக்கு உரிமையை நிறைவேற்ற பல லட்சம் செலவு செய்து இந்தியா வருவார். அப்போது அவரது ஓட்டினை வேறொருவர் போட்டதால் தன் அதிரடியை தொடங்குவார். அதுபோன்ற ஒரு சம்பவம் கர்நாடக தேர்தலிலும் அரேங்கேறியுள்ளது. கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்களிக்க வெளியூர்கள் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் பலர் வந்து உள்ளனர்.

கர்நாடகாவை சேர்ந்த அவர்கள் தங்களது வாக்குரிமையை செலுத்த ஆர்வத்துடன் வந்தனர். அதன்படி அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் வசித்து வந்த கர்நாடகாவை சேர்ந்த ராகவேந்திரசேத் அங்கிருந்து ஆர்வத்துடன் வாக்களிக்க வந்தார். அதற்கென அவர் 14,000 கி.மீ பயணம் மேற்கொண்டு ரூ.1.50 லட்சம் செலவு செய்து வந்தார். எனினும் அவர் வாக்களிக்க முடியாமல் ஏமாற்றமடைந்தார். ஏனெனில் ராகவேந்திரசேத்தின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக அவர் தேர்தல் அதிகாரிகளிடம் முறையிடப்போவதாக தெரிவித்தார்.