தமிழக பள்ளிக்கல்வித்துறை நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் என்ற திட்டத்தை அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி அரசு பள்ளிகளில் படித்து தற்போது உயர்ந்த பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் தொழிலதிபர்கள் போன்றோர் சமூகப் பொறுப்புணர்வு மற்றும் நிதி ஆகியவற்றின் மூலம் அரசு பள்ளிகளை தத்தெடுத்து பள்ளிகளுக்கு வர்ணம் பூசுதல், கழிவறை வசதி, நூலக வசதி, ஆய்வகங்கள், இணையதள வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதாகும்.

இந்நிலையில் நம்ம ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்காக தற்போது தமிழக ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களின் மார்ச் மாத ஊதியத்தில் இருந்து ஒரு நாள் சம்பளத்தை கொடுப்பதாக தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். இதை தமிழக அரசு ஏற்றுக் கொண்டதோடு மார்ச் மாத ஊதியத்தில் ஒரு நாள் சம்பளம் கழிக்கப்பட்டு வங்கி கணக்கில் ஐஏஎஸ் அதிகாரிகளின் சம்பளத்தை அனுப்ப அரசு முடிவு செய்துள்ளது. மேலும் ஸ்கூல் பவுண்டேஷன் திட்டத்திற்காக ஐஏஎஸ் அதிகாரிகள் தங்களின் ஒரு நாள் ஊதியத்தை கொடுக்க முன் வந்தது வரவேற்பை பெற்றுள்ளது.