கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் கலைக் கல்லூரியில் சின்ன திருப்பதி என்பவர் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தங்கை உறவுமுறை கொண்ட பெண் இதே கல்லூரியில் பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் பி.ஏ மூன்றாம் ஆண்டு படிக்கும் லிங்கேஸ்வரன் என்பவர் அந்த மாணவியை காதலிப்பதாக கூறி தொந்தரவு அளித்துள்ளார். இது குறித்து மாணவி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததால் இருதரப்பிலும் ஏற்கனவே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

நேற்று லிங்கேஸ்வரனிடம் சின்ன திருப்பதி இந்த பிரச்சனை குறித்து கேட்பதற்காக சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் லிங்கேஸ்வரன் பிளேடால் சின்ன திருப்பதியின் கழுத்தை அறுத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் படுகாயமடைந்த சின்ன திருப்பதி கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.