கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி காமராஜர் நகர் ஊத்துக்காடு ரோடு பகுதியில் நடராஜன்(73) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கமலம்(68) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகன்களும், 3 மகள்களும் இருக்கின்றனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. இவர்களது 3-வது மகன் செந்தில்(40) குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியை பிரிந்து கடந்த 6 மாதங்களாக பெற்றோருடன் தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் நடராஜனும், செந்திலும் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் சமாதானம் அடைந்து 2 பேரும் தூங்க சென்றனர். நேற்று அதிகாலை 3.30 மணிக்கு தூக்கத்திலிருந்து எழுந்து வந்த போது நிலைதடுமாறு கீழே விழுந்ததால் நடராஜனுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டதாக கூறி ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நடராஜனை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் உறவினர்கள் அவரது உடலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். இதற்கிடையில் நடராஜனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பொள்ளாச்சி கிழக்கு போலீசாருக்கு புகார் சென்றதால் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நடராஜனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

அப்போது தலையில் தாக்கப்பட்டதால் தான் நடராஜன் உயிரிழந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் செந்திலை பிடித்து விசாரணை நடத்திய போது குடிபோதையில் தனது தந்தையை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்ததை செந்தில் ஒப்புக்கொண்டார். போலீசாரிடமிருந்து தப்பிப்பதற்காக அவர் கீழே விழுந்து விட்டதாக நாடகமாடி உள்ளனர். இதனால் செந்திலை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.