கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திப்பனூர் கிராமத்தில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூவரசன்(17) என்ற மகன் இருக்கிறார். நேற்று பூவரசன் மாட்டு தொழுவத்திலிருந்து குப்பை மற்றும் சாணத்தை அள்ளி அருகில் இருக்கும் குப்பை கிடங்கில் கொட்டியுள்ளார். அப்போது குப்பைக்குள் மறைந்திருந்த 1 1/2 அடி நீளமுள்ள குட்டி பாம்பு பூவரசனை கடித்ததால் அவர் வலியில் அலறி சத்தம் போட்டுள்ளார்.

அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த பூவரசனின் தாய் கோமதி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் அந்த குட்டி பாம்பை லாவகமாக பிடித்து தண்ணீர் பாட்டிலில் அடைத்தார். இதனையடுத்து பூவரசனை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அப்போது கோமதி தனது மகனை கடித்த பாம்புடன் மருத்துவமனைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாட்டிலில் இருந்த பாம்பை டாக்டர்கள் பார்த்ததும் குட்டி பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.