கடலூர் மாவட்டத்தில் உள்ள சிதம்பரம் சொக்கலிங்க தெருவில் ஜம்புலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஜனுஷ்கா (8) தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த 13-ஆம் தேதி அரையாண்டு தேர்வு தொடங்கியதால் ஜம்புலிங்கம் தனது மகளை மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். புறவழிச்சாலையில் மேம்பால பணிகள் நடைபெறுவதால் சாலை மேடு பள்ளமாக இருக்கிறது.

இந்நிலையில் நிலைதடுமாறிய மோட்டார் சைக்கிளில் இருந்து ஜம்புலிங்கமும், அவரது மகள் தனுஷ்காவும் கீழே விழுந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரி சிறுமியின் மீது ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே ஜனுஷ்கா உயிரிழந்தார். மேலும் ஜம்புலிங்கம் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.