விருதுநகர் மாவட்டத்தில் உள்ள தண்டியனேந்தல் கிராமத்தில் தமிழ் செல்வி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ப்ரீத்தி அரசு பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளார். பள்ளிக்கு செல்லும்போது திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் ப்ரீத்தி பள்ளி சீருடையில் வீட்டிலேயே இருந்துள்ளார். அதே பகுதியில் 4 வயதுடைய அன்பழகி என்ற சிறுமியும் வசித்து வருகிறார். அங்கன்வாடிக்கு செல்லாமல் அன்பழகியும் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கண்வாய் பகுதியில் பிரீத்தியும், அன்பழகியும் விளையாடிக் கொண்டிருந்தனர். பின்னர் மணல் அள்ள தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்த தண்ணீரில் ப்ரீத்தியும், அன்பழகியும் இறங்கி குளித்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் தண்ணீரில் மூழ்கினர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கருப்புசாமி என்பவர் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். அங்கு ப்ரீத்தியை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். பின்னர் மேல் சுகிச்சையாக அன்பழகி காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.