டெல்லி ஜாகிர் நகர் பகுதியில் பைசன் அகமது-சகானா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆறு வயதில் அகமது அலி என்ற மகனும், ஏழு மாத இப்ராஹிம் என்ற குழந்தையும் இருந்துள்ளனர். இந்நிலையில் பைசன் அகமது தனது மனைவி மகன்கள் உறவினரான முகமது அலி குடும்பத்தினருடன் ஊட்டிக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அவர்கள் குடும்பத்துடன் ரயில் மூலம் ஹைதராபாத்துக்கு வந்தனர். பின்னர் காரில் அனைவரும் ஊட்டிக்கு சுற்றுலா சென்றனர்.

அவர்கள் ஊட்டி உள்பட பல்வேறு இடங்களில் சுற்றி பார்த்துவிட்டு நேற்று மசினக்குடி சாலை வழியாக மைசூர் சென்று அதன் பிறகு ஹைதராபாத் செல்ல திட்டமிட்டு இருந்தனர். இந்நிலையில் தலைக்குந்தா சந்திப்பில் இருந்து கல்லட்டி வழியாக செல்ல வெளி மாநில வாகன பதிவு எண் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்பதால் அவர்கள் ஊட்டியில் இருந்து புதுமந்து சாலை காரப் பிள்ளு வழியாக கல்லட்டி சாலையை சென்றடைய முடிவு செய்தனர். அவர்கள் உல்லத்தி பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் 50 அடி பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் கார் சுக்கு நூறாக நொறுங்கி ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று படுகாயம் அடைந்த ஆறு பேரையும் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே 6 வயது சிறுவன் அகமது அலி உயிரிழந்தான். மற்ற ஐந்து பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.