கடலூர் மாவட்டத்தில் உள்ள பெருமுளை கிராமத்தில் கொளஞ்சி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ரேகாவுக்கு அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பழனிவேல் என்பருடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு 10 வயதுடைய வரதராஜன் என்ற மகன் இருந்துள்ளான். இந்த சிறுவன் 5-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். தற்போது பழனிவேல் பக்ரைனில் வேலை பார்த்து வருவதால் ரேகா தனது பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் ரேகாவின் சகோதரர் மணிகண்டன் புதிய டிராக்டர் வாங்கியுள்ளார். இதனையடுத்து மணிகண்டனின் வயலில் உறவினரான தினேஷ் என்பவர் கோடை உழவு செய்வதற்காக டிராக்டரை ஓட்டி சென்றார்.

அதே டிராக்டரில் மணிகண்டனும், வரதராஜனும் அமர்ந்திருந்தனர். இந்நிலையில் வயல் வரப்பில் ஏறிய போது டிராக்டரில் இருந்து வரதராஜன் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் சிறுவனின் தலையில் டிராக்டர் சக்கரம் ஏறி இறங்கியதால் சம்பவ இடத்திலேயே வரதராஜன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வரதராஜனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.