திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடப்பட்டி வேதமணி நகரில் முகமது அன்சாரி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பழைய வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு சம்சுல் குதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக முகமது அன்சாரி தனது மனைவியை விட்டு பிரிந்து வாழ்கிறார்.

இதனையடுத்து பலமுறை தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு அழைத்தும் சம்சுல் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த முகமது தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முகமது அன்சாரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.