ஈரோடு மாவட்டத்திலுள்ள திண்டல் வள்ளிபுரத்தான் பாளையத்தில் தனியார் பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளிக்கு சொந்தமான வேன் தொட்டிபாளையம், திருவள்ளுவர் நகர், போலீஸ் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் இருந்து 17 மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு நேற்று பள்ளி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பவானி அந்தியூர் பிரிவு சாலையில் வைத்து முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை வேன் டிரைவர் முந்தி செல்ல முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக இரும்பு தடுப்பில் மோதி வேன் கவிழ்ந்து விட்டது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வேன் கண்ணாடியை உடைத்து மாணவர்களை மீட்டனர். இந்த விபத்தில் 11- ஆம் வகுப்பு மாணவன் தக்ஷாநிதி, எட்டாம் வகுப்பு மாணவி அனுஸ்ரீ, எல்கேஜி படிக்கும் 4 வயது குழந்தை ஆகவா, வேன் டிரைவர் கார்த்திக், குழந்தைகளின் பாதுகாப்புக்காக வந்த அவரது மனைவி ஆகிய 5 பேரும் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.