முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில், இலங்கை ‘ஏ’ அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட்டின் வளர்ந்து வரும் இளம் நட்சத்திரமும், அதிரடி பேட்ஸ்மேனுமான வைபவ் சூர்யவன்ஷி மீண்டும் ஒருமுறை பெரிய ஸ்கோர் அடிக்காமல் ஏமாற்றமளித்துள்ளார். இத்தொடரின் முதல் போட்டியில் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்த அவர், இன்றைய 4-வது லீக் போட்டியில் 14 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே எடுத்து பெவிலியன் திரும்பினார்.

எனினும், இந்தச் சிறிய இன்னிங்ஸில் தனது சிக்ஸர் வறட்சிக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார். நடப்பு ஐபிஎல் 2026 தொடரில் 72 சிக்ஸர்களைப் பறக்கவிட்டு சாதனை படைத்த சூர்யவன்ஷியால், கடந்த இரண்டு போட்டிகளாக ஒரு சிக்ஸர் கூட அடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

இன்றைய போட்டியில் டாஸ் இழந்த இந்திய ‘ஏ’ அணி, கேப்டன் திலக் வர்மா தலைமையில் முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி களம் இறங்கினர். ஆட்டத்தின் இரண்டாவது ஓவரில் சூர்யவன்ஷி தனது ருத்ரதாண்டவத்தைக் காட்டினார். அந்த ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் 1 அசுர சிக்ஸர் விளாசி மொத்தம் 17 ரன்களைக் குவித்தார்.

 

ஆனால், 4-வது ஓவரில் ஆஃப் ஸ்டம்பிற்கு வெளியே வந்த பந்தை, கால்களை நகர்த்தாமல் அடிக்க முயன்றார். பந்து காற்றில் எழும்ப, பாயிண்ட் திசையில் நின்றிருந்த இலங்கையின் வானுஜா சஹான் அதை அற்புதமாக கேட்ச் பிடித்தார். தேவையில்லாத ஷாட் தேர்வால் வைபவ் சூர்யவன்ஷி தனது விக்கெட்டைப் பறிகொடுத்து ரசிகர்களை ஏமாற்றினார்.