புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசர்குளம் மேல் பாதி கிராமத்தில் விவசாயியான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சின்ன கருப்பன் ஆறாம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்நிலையில் சின்ன கருப்பன் பூஜை செய்வதற்காக கடையிலிருந்து விநாயகர் சிலையை வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார். இதனையடுத்து சிலையை வீட்டில் வைத்து மின்சார விளக்கு அமைத்துக் கொண்டிருந்தபோது சின்ன கருப்பன் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சின்ன கருப்பனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.