கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்கலம்பேட்டை பகுதியில் 16 வயது சிறுவன் வசித்து வருகிறான். இந்த சிறுவன் கள்ளக்குறிச்சி பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த மாணவனுக்கும் அதே பள்ளியில் 11-ஆம் வகுப்பு படிக்கும் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த மற்றொரு மாணவருக்கும் பள்ளிக்கு செல்லும்போது பேருந்து இருக்கையில் இடம் பிடிப்பது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

சம்பவம் நடைபெற்ற அன்று இருவருக்கும் இடையே பேருந்தில் இடம் பிடிப்பது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த மாணவன் தனது நண்பர்கள் 5 பேருடன் இணைந்து மங்கலம்பேட்டையை சேர்ந்த மாணவரை தகாத வார்த்தையால் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த மாணவர்களை சுற்றி வளைத்து பிடிக்க முயன்றனர்.

ஆனால் போலீசாரை கண்டதும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அதில் இரண்டு பேர் மட்டும் பிடிபட்டதால் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையிள் அவர்கள் உளுந்தூர்பேட்டையை சேர்ந்த 9- ஆம் வகுப்பு 11-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் என்பது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.