ஈரோடு மாவட்டத்தில் உள்ள நத்தமேட்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 200 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று மாலை பள்ளி முடிந்ததும் 6, 7-ஆம் வகுப்பு படிக்கும் 20 மாணவிகள், ஒரு மாணவன் என 21 பேர் ஒன்றாக வீட்டிற்கு சென்றனர். சிறிது தூரம் சென்றதும் விஷத்தன்மை கொண்ட நாட்டுக்காய் செடிகளை மாணவர்கள் பார்த்தனர். அதிலிருந்த காய்களை பறித்து தின்று விட்டு அவர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

இரவு நேரத்தில் நாட்டுக்காய் சாப்பிட்ட ஒவ்வொரு மாணவ, மாணவிகளுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவர்களை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மாணவர்கள் அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து அறிந்த போலீசாரும், கல்வித் துறை அதிகாரிகளும் மாணவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.