திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தனம் பட்டியில் தனியார் நர்சிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் தாளாளரும், அ.ம.மு.க பிரமுகருமான ஜோதி முருகன் கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து மூன்று மாணவிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கடந்த 2021-ஆம் ஆண்டு கல்லூரி தாளாளர் ஜோதி முருகன், கல்லூரி விடுதி காப்பாளர் அர்ச்சனா உள்ளிட்டோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி ஜோதி முருகனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 75 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் விடுதி காப்பாளர் அர்ச்சனாவுக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.