திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நல்லி கவுண்டம்பாளையத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் காந்தேஸ்வரி(13) தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். சிறுமியின் இடது காலில் ரத்த ஓட்டத்தில் அடைப்பு ஏற்பட்டு வீக்கம் இருந்ததால் அதற்கான சிகிச்சை பெற்று வந்ததாக தெரிகிறது.

நேற்று பள்ளியில் இறை வணக்கம் முடிந்து மாணவர்கள் வகுப்பறைக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென மயங்கி விழுந்த காந்தேஸ்வரியை பள்ளி நிர்வாகத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த டாக்டர் காந்தேஸ்வரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.