தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுன் நடிப்பில் சென்ற 2010ல் வெளியாகிய படம் வருடு. குணசேகர் இயக்கிய இப்படத்தில் ஹீரோயினியாக பானு ஸ்ரீ மெஹ்ரா என்பவர் நடித்து இருந்தார். இவர் Twitter-ல் அல்லு அர்ஜுன் பக்கத்தை பின் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் அல்லு அர்ஜுன் திடீரென்று இவரது டுவிட்டர் கணக்கை பின் தொடர்வதிலிருந்து பிளாக் செய்தார். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பானு ஸ்ரீ இதுகுறித்து தன் டுவிட்டர் பதிவில், “நான் யார் என நினைத்து குழம்ப வேண்டாம். வருடு திரைப்படத்தில் நடித்திருந்தேன்.

அதன்பின் எனக்கு தற்போது வரை பெரிய அளவில் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனினும் என் போராட்டங்களிலிருந்து நகைச்சுவையாக இருப்பது எப்படி என கற்றுக்கொண்டேன். இதோ தற்போது அல்லு அர்ஜுன் கூட என்னை அவரது டுவிட்டரில் பின் தொடர முடியாமல் பிளாக் செய்துள்ளார்” என விரக்தியுடன் குறிப்பிட்டு இருந்தார். அதே நேரம் பிளாக் செய்த 3 மணி நேரத்திலேயே மீண்டும் பானு ஸ்ரீ தன்னை பாலோ செய்யும் வகையில் அன்பிளாக் செய்துவிட்டார் அல்லு அர்ஜுன்.

அதற்குள் அவரை பற்றி தவறாக பேசி விட்டோமே என நினைத்த பானு ஸ்ரீ உடனடியாக மீண்டும் தன் டுவிட்டர் பக்கத்தில் “கிரேட் நியூஸ், அர்ஜுன் என் நம்பரை அன்பிளாக் செய்து விட்டார். எனக்கு படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்ற அர்த்தத்தில் அவரை நான் தவறாக எதுவும் பேசவில்லை. என் போராட்டத்தில் தற்போதும் நகைச்சுவைகளை கண்டுகொண்டு இன்னும் முன்னோக்கி செல்லவே முயற்சித்து வருகிறேன். எதையும் ஸ்போர்ட்டிவாக எடுத்துக்கொண்ட அல்லு அர்ஜுனுக்கு நன்றி” என சொல்லி சமாளித்துள்ளார்.