திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழைய செம்பட்டி பகுதியில் ராமமூர்த்தி- நாகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகள் மணிஷா(16) பாட்டி வீட்டில் தங்கி இருந்து சின்னாளப்பட்டியில் இருக்கும் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரியாக பள்ளிக்கு செல்லாத மணிஷா நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் மாணவியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

நேற்று திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மாணவியின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது மாணவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் திண்டுக்கல் அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அறிந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பிறகு மாணவியின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு உடலை வாங்கி சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.