கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நெகமம் அருகில் இருக்கும் கோவில் வீதியில் ரவிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தென்னம்பாளையத்தில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார் இவருக்கு மைதிலி என்ற மனைவி உள்ளார். நேற்று முன்தினம் நெகமம்-பல்லடம் சாலையில் இருக்கும் மதுபான கடையில் ரவிக்குமார் மது வாங்கியுள்ளார்.

பின்னர் காரில் அமர்ந்து கொண்டே மது குடித்துவிட்டு ஏ.சி-யை போட்டு கார் கண்ணாடியை முழுவதுமாக அடைத்துக் கொண்டு ரவிக்குமார் தூங்கியுள்ளார். சிறிது நேரத்தில் ஏ.சி-யிலிருந்து வந்த அதிக புகை மற்றும் அளவுக்கு அதிகமான மது காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டு ரவிக்குமார் மயங்கி விழுந்தார். இதற்கிடையே கார் நீண்ட நேரமாக அங்கேயே நின்றதால் சந்தேகமடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் கார் கண்ணாடியை உடைத்து மயங்கி கிடந்த ரவிக்குமாரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் ரவிக்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.