கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரில் ஏரோ இந்தியா 2023 எனும் பெயரில் விமான கண்காட்சி நேற்று நடத்தப்பட்டது. ஆசிய அளவில் மிகப்பெரிய 14-வது விமான கண்காட்சியான இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் லிமிடெட்(எச்.ஏ.எல்.) சார்பாக எச்.எல்.எப்.டி.-42 எனும் சூப்பர்சோனிக் விமானம் ஒன்றும் இடம்பெற்றிருந்தது. அதன் வால் பகுதியில் கடவுள் அனுமனின் உருவபடம் காணப்பட்டது. அதன் அருகே புயல் வந்து கொண்டிருக்கிறது என்ற வாசகமும் எழுதப்பட்டிருந்தது.

இந்த புகைப்படங்களை மத்திய சுரங்கம், நிலக்கரி மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தன் டுவிட்டரில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இருப்பினும் போர் விமானம் ஒன்றில் இந்து கடவுளின் படம் இடம்பெற்றிருப்பதற்கு சமூக ஊடகத்தில் கடும் விவாதம் நடந்தது. ஆயுதப்படைகள் எந்தவொரு மதம் சார்ந்த பிரதிநிதித்துவங்களை கொண்டிருக்ககூடாது. அது வீரர்களின் மன நிலையை பாதிக்கும் என்ற அடிப்படையிலான விமர்சனங்கள் எழுந்தது. இதை கவனத்தில் கொண்ட இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் உடனே அந்த புகைப்படங்களை நீக்கி சர்ச்சைக்குரிய விவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தது.