தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் சமத்துவ பொங்கல் விழாவினை  கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் கடலூர் மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழாவினை முன்னிட்டு  அலுவலக வளாகத்தில் வண்ண வண்ண கோலங்கள் இடப்பட்டு, ஆங்காங்கே கரும்புகள் வைக்கப்பட்டு, அலங்காரம் செய்து தாரை, தப்பட்டை முழங்க பொங்கலிடப்பட்டது.

அப்போது விழாவில் திரைப்பட பாடல்களும் இசைக்கப்பட்டன. இதனையடுத்து நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்திலிருந்து “ரஞ்சிதமே” என்ற பாடல் திடீரென போடப்பட்டது. உடனே இந்தப் பாட்டை கேட்டதும் கடலூர் மாநகராட்சி 4-வது வார்டு பெண் கவுன்சிலர் சரிதா பாடலுக்கு ஏற்ப குத்தாட்டம்  போட்டு, அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார். தற்போது இந்த வீடியோவானது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.