சேலம் மாவட்டத்தில் உள்ள உடையாப்பட்டியில் இருக்கும் தனியார் கல்லூரியில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு மாணவர்களுடைய 16 செல்போன்கள் திருடு போனது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி கிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்பவரை கைது செய்து 20 செல்போன்களை மீட்டனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது, கார்த்திகேயன் பி.டெக் படித்து முடித்து விட்டு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல்லில் இருக்கும் இரண்டு தனியார் கல்லூரிகளில் ஒப்பந்த முறையில் பேராசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். அவர் பேன்சி ஸ்டோர் மற்றும் செல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் போதிய வருமானம் இல்லாமல் சிரமப்பட்ட கார்த்திகேயன் தனியார் கல்லூரிக்கு வேலை பார்ப்பவர் போல சென்று ஆட்கள் இல்லாத வகுப்பறைக்குள் நுழைந்து செல்போன்களை திருடியுள்ளார். அவர் மீது ஏற்கனவே இரண்டு காவல் நிலையங்களில் தலா ஒரு செல்போன் திருட்டு வழக்கு நிலுவையில் இருக்கிறது என கூறியுள்ளனர்.