சேலம் மாவட்டத்தில் உள்ள அஸ்தம்பட்டி மணக்காடு மாரியம்மன் கோவில் தெருவில் தங்கராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் 5 ரோடு தொழிற்பேட்டையில் லேத் பட்டறை வைத்துள்ளார். இந்நிலையில் தங்கராஜ் தொழிலுக்காக ரெட்டியூரில் வசிக்கும் ராஜா என்பவரிடம் 2 லட்ச ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இந்நிலையில் 2 மாதமாக வட்டி தொகை கொடுக்காததால் ராஜா லேத் பட்டறைக்கு சென்று தங்கராஜுக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கராஜ் விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை சேலத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் தங்கராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்த தங்கராஜின் மனைவி விஜயா தனியார் மருத்துவமனையில் இருக்கும் ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுபற்றி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தங்கராஜ் மற்றும் விஜயாவின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ராஜாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.