சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் கொல்லம் தோட்டத்தில் கோபி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் ஆர்த்தி அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக ஆர்த்தியும் மாத்தூரை சேர்ந்த ஆகாஷ் என்பவரும் காதலித்து வந்தனர். இவர்களது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு ஆகாஷ் குடிபோதையில் ஆர்த்தி வீட்டில் அருகே நின்று கொண்டிருந்தார்.

அப்போது அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆகாஷை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதனை தொடர்ந்து ஆகாஷின் பெற்றோர் காவல் நிலையத்திற்கு சென்று மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு ஆகாஷை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

இதனால் ஏற்பட்ட தகராறில் மன உளைச்சலில் இருந்த ஆர்த்தி உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ஆர்த்தியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.