திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மூங்கிலடி வடக்கு தெருவில் இளவரசி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசி சென்னையை சேர்ந்த ரூப்பேஷ்(36) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்களும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ரூப்பேஷ் தனது மனைவியை மீது சந்தேகப்பட்டு அவரை தாக்கியுள்ளார். இதுகுறித்து இளவரசி களக்காடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் ரூப்பேஷும், இளவரசியும் நேற்று முன்தினம் களக்காடு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்றனர்.

அந்த சமயம் போலீசார் வேறு வழக்கு தொடர்பாக விசாரித்து கொண்டிருந்ததால் கணவன், மனைவி இருவரும் நாற்காலியில் அமர்ந்திருந்தனர். அப்போது ரூப்பேஷ் தான் கொண்டு வந்த விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீசார் அவரை களக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் ஏற்கனவே மூன்று முறை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.