திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து இரவு 7 மணிக்கு மதுரை நோக்கி சென்றது. அந்த பேருந்தில் காந்தி கிராமத்தை சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண் தனது கணவருடன் பயணம் செய்துள்ளார். அந்த பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் கர்ப்பிணி மட்டும் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவரது கணவர் சிறிது தூரம் தள்ளி நின்று கொண்டிருந்தார்.

இந்நிலையில் திண்டுக்கல்- மதுரை நான்கு வழி சாலையில் தோமையார்புரம் அருகே சென்ற போது 40 வயது மதிக்கத்தக்க நபர் கர்ப்பிணியை உரசியபடி சில்மிஷத்தில் ஈடுபட்டதால் அந்த பெண் அதிர்ச்சியடைந்து தனது கணவரிடம் தெரிவித்தார். பின்னர் தனது மனைவிக்கு அருகே வந்த கணவர் அந்த நபரிடம் சற்று தள்ளி நிற்குமாறு தெரிவித்தார். அதன் பிறகும் கணவர் கண் எதிரே மீண்டும் அந்த நபர் கர்ப்பிணியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே காந்திகிராமம் பிரிவு பேருந்து நிறுத்தம் வந்ததும் கர்ப்பிணியும், அவரது கணவரும் கீழே இறங்கினர். இதே போல் அந்த நபரையும் கண்டக்டர் பேருந்தில் இருந்து கீழே இறக்கி விட்டார். பின்னர் அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் கர்ப்பிணியின் கணவர் அவரை சரமாரியாக அடித்து உதைத்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர், வடக்காட்டுப்பட்டியை சேர்ந்த பில்லான் என்பது தெரியவந்தது. பொதுமக்கள் தாக்கியதால் காயமடைந்த பில்லான் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.