தென்காசி மாவட்டத்திலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை 6.15 மணிக்கு சென்னை நோக்கி புறப்பட்டது. இந்நிலையில் ரயில் இரவு 9.20 மணிக்கு மறவன் குளத்தை கடந்து சென்றபோது மர்ம நபர்கள் முன்பதிவு இல்லாத பெட்டி மீது கற்களை வீசி தாக்கியுள்ளனர். இதனால் ரயிலில் பயணம் செய்த கடையநல்லூரைச் சேர்ந்த கலா(28), அய்யாபுரத்தைச் சேர்ந்த மாரிச்செல்வி ஆகிய இருவரும் காயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக பயணிகள் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.

பின்னர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விரைந்து வந்து பயணிகளிடம் விசாரணை நடத்தி படுகாயமடைந்த பெண்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதனையடுத்து ரயில் மதுரை ரயில் நிலையத்தை வந்தடைந்த உடன் காயமடைந்த பெண்கள் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கற்களை வீசிவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.