கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள குனியமுத்தூர் விநாயகர் கோவில் வீதியில் ஸ்ரீராம்(22) என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு சுந்தராபுரத்தில் இருக்கும் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்க்கும் 19 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள். இதுகுறித்து அறிந்த இளம்பெண்ணின் பெற்றோர் தங்களது மகளை கண்டித்தனர். இதனால் இளம்பெண் ஸ்ரீராமுடன் பேசுவதை நிறுத்திவிட்டார்.

நேற்று முன்தினம் இளம்பெண் டிராவல்ஸ் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டிருந்த போது ஸ்ரீராம் அங்கு சென்று ஏன் என்னிடம் பேச மறுக்கிறாய்? என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கோபத்தில் ஸ்ரீராம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளம்பெண்ணை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் படுகாயமடைந்த இளம் பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஸ்ரீராமை தீவிரமாக தேடி வருகிறார்கள்.