கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசகுப்பம் கிராமத்தில் சுப்பிரமணி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் சந்தனகுமார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று குமார் தனது வீட்டிற்கு முன்பு விளையாடிக் கொண்டிருந்தார். அவரது வீட்டிற்கு செல்லும் மின்சார ஒயர் அறுந்து துணி காயப்போடும் கம்பியில் மின்சாரம் பாய்ந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குமார் கம்பியை பிடித்ததால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டான். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் குமாரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு குமாரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.