சென்னை மாவட்டத்தில் உள்ள பட்டாபிராம் கக்கன்ஜி நகர் மாடல் தெருவில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சுவேதா அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். நேற்று பள்ளி விடுமுறை தினம் என்பதால் சுவேதா வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் குளித்துவிட்டு ஈரமான கையுடன் சுவேதா வீட்டு அறையில் இருந்த மின் விளக்கை போடுவதற்காக சுவிட்சை அழுத்தியுள்ளார்.

அப்போது மின்சாரம் தாக்கி சுவேதா மயங்கி கீழே விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் உடனடியாக சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுவேதா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.