ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் எக்கத்தூர் கிராமத்தில் பி.ஏ பட்டதாரியான மூர்த்தி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது வீட்டிற்கு அருகே இருக்கும் தோட்டத்தில் ஆடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டி சென்றுள்ளார். இந்நிலையில் மாலை நேரத்தில் ஆடுகள் மேய்ந்து விட்டு வீடு திரும்பியது. ஆனால் மூர்த்தி வரவில்லை. இதனால் உறவினர்கள் அவரை தேடி சென்றனர். அப்போது வேப்பமரத்துக்கு அடியில் உடல் கருகிய நிலையில் மூர்த்தி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மூர்த்தியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், நேற்று மதியம் கடம்பூர் மலைப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மழைக்காக மூர்த்தி வேப்ப மரத்திற்கு அடியில் ஒதுங்கி நின்றுள்ளார். அப்போது மின்னல் தாக்கி அவர் இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.