திருச்சி மாவட்டத்தில் உள்ள தென்னூர் அண்ணா நகர் பகுதியில் டாக்டரான விக்னேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் புதுச்சேரியில் இருக்கும் மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை மகப்பேறு மருத்துவம் படித்து வந்துள்ளார். இதற்காக விக்னேஸ்வரன் தவளக்குப்பத்தில் இருக்கும் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற விக்னேஸ்வரன் வீட்டிற்கு திரும்பி வராததால் அவரை நண்பர்கள் செல்போனில் தொடர்பு கொண்டனர். ஆனால் நீண்ட நேரமாக விக்னேஸ்வரன் அழைப்பை எடுக்கவில்லை.

இதனால் நண்பர்கள் பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்த போது ரெட்டிசாவடி அருகே இருக்கும் சிறிய பாலத்தின் கீழ் விக்னேஸ்வரன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விக்னேஸ்வரனின் உடலை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் கல்லூரியில் இருந்து விக்னேஸ்வரன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி பள்ளத்தில் விழுந்து விக்னேஸ்வரன் உயிரிழந்தது தெரியவந்தது.