ஈரோடு மாவட்டத்தில் உள்ள சத்தியமங்கலத்தில் இருந்து தனியார் பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் அன்னூர் பட்டறை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகே சென்றபோது திடீரென பேருந்தின் முன் பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த டிரைவர் பேருந்தை உடனடியாக நிறுத்தினார். சிறிது நேரத்தில் பேருந்து தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு பேருந்து விட்டு கீழே இறங்கினர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று பேருந்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பின்னர் பயணிகள் மாற்று பேருந்தில் கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.