கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கடையாலுமூடு பகுதியில் மைதீன் முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அபுபக்கர் சித்திக் என்ற மகன் உள்ளார். இவர் காபிக்காடு பகுதியில் புதிதாக கடை அமைப்பதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு நேரத்தில் வேலையை முடித்து விட்டு சித்திக் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் அண்டுகோடு பகுதியில் உள்ள ஆற்று பாலத்தில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு சுவர் மீது மோதி பள்ளத்தில் தலைக்குப்புற கவிழ்ந்தது.

இந்த விபத்தில் லேசான காயங்களுடன் அபுபக்கர் சித்திக் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.