திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முத்தம்பட்டு கிராமத்தில் பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1-ஆம் தேதி பாண்டியன் வடமதுரை அருகில் உள்ள கிராமத்திற்கு சென்று உறவுக்கார பெண்ணான 9- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றார். இதனையடுத்து தனது மகனான மெக்கானிக் அருண்குமாருக்கு பாண்டியன் அந்த மாணவியை திருமணம் செய்து வைத்தார்.

இதனை அறிந்து அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் வடமதுரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் மன உளைச்சலில் இருந்த மாணவியின் தாய் கடந்த 2-ஆம் தேதி மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீ குளித்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த மாணவியின் தாயை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பாண்டியன், அவரது மனைவி ஜானகி, அருண்குமார், உறவினர்களான ராஜம்மாள், சிவசக்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். சிவசக்தி, ராஜம்மாள் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் ஜானகி, அருண்குமார், பாண்டியன் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் மாணவி மீட்கபட்டு திண்டுக்கல்லில் இருக்கும் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.