விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி முருகன் காலனியில் பாண்டி செல்வி(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு பாண்டி செல்வியின் கணவர் இறந்துவிட்டார். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பாண்டிச்சேரி பால்பாண்டி என்பவரை காதலித்து 2-வது திருமணம் செய்து கொண்டார். இது பாண்டி செல்வியின் தாய் தங்க பாண்டியம்மாளுக்கும், தம்பி மாரியப்பனுக்கும் பிடிக்கவில்லை. தற்போது பாண்டி செல்வி 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.

சம்பவம் நடைபெற்ற அன்று பாண்டி செல்வி தனது கணவருடன் ஒரு கடையில் நின்று காய்கறி வாங்கிக் கொண்டிருந்தார். அப்போது மாரியப்பன் தனது அக்காவுடன் தகராறு செய்து அவரது வயிற்றில் எட்டி உதைத்ததாக தெரிகிறது. இதனால் கீழே விழுந்து உடல் நலம் பாதிக்கப்பட்ட பாண்டி செல்விக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மாரியப்பன், அவரது தாய் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.