கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள நேரு நகரில் யுவ பிரசாந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு யுவ பிரசாந்தின் செல்போன் எண்ணுக்கு ஒரு குறுந்தகவல் வந்தது. அதில் ஆன்லைனில் பணம் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலிருந்த செல்போன் எண்ணை யுவ பிரசாந்த் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய மர்ம நபர் வீட்டில் இருந்தபடி குறைந்தபட்சம் முதலீடு செய்தால் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

இதனை நம்பி யுவ பிரசாந்த் சிறிது பணத்தை முதலீடு செய்தவுடன் அவருக்கு லாபத்தொகை வழங்கப்பட்டது. இதனால் அந்த நிறுவனத்தின் மீது நம்பிக்கை ஏற்பட்டு யுவ பிரசாந்த் 8 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்துள்ளார். ஆனால் கூறியபடி முதலீடு செய்த பணத்தையும், அதற்கான லாபத்தையும் கொடுக்கவில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த யுவ பிரசாந்த் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மோசடி செய்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.