கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மேல்புறம் வட்டவிளை பகுதியில் கணவரை இழந்த 35 வயதுடைய பெண் தனது தாயுடன் வசித்து வருகிறார். இந்த பெண் மேல்புறம் சந்திக்க வழியாக செல்லும்போது சில ஆட்டோ டிரைவர்கள் அவரை கேலி,கிண்டல் செய்து வந்துள்ளனர். கடந்த 9-ஆம் தேதி கேலி, கிண்டல் செய்த ஆட்டோ டிரைவர்களை அந்த பெண் தட்டி கேட்டார். இதனால் கோபமடைந்த அவர்கள் பெண்ணை மின் கம்பத்தில் கட்டி வைத்தனர்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. இதனை பார்த்த போலீசார் பெண்ணை மீட்டு 5 பேர் மீது வழக்குபதிவு செய்தனர். இதனையடுத்து சசி, வினோத், விஜயகாந்த் ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் டெம்போ டிரைவர் பிபின், ஆட்டோ டிரைவர் அரவிந்த் ஆகிய இருவரும் கேரளாவில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனால் தனிப்படை போலீசார் இருவரையும் பிடிக்க கேரளாவுக்கு விரைந்தனர்.